முகப்பு கட்டுரைகள் வீடியோ புகைபடங்கள்

உங்களின் மீது இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாகட்டுமாக!!!

Friday, December 24, 2010


ஊழலில் சாதனை நாட்டின் வேதனை
Friday, 17 December 2010 12:21 .

இந்தியத் திரு நாட்டின் பெருமைக்குச் சான்றாக விளங்குவது நம் மக்களின் எளிமையும் நேர்மையுமே ஆகும். அன்றைய தலைவர்கள் பொருளாதார முறைகேட்டில் ஈடுபட அஞ்சியவர்களாய் வாழ்ந்தனர். இருப்பினும் இந்நாட்டில் தான் ஒருவேளை மட்டும் உணவு கிடைக்காத நிலையில் கோடானு கோடி மக்கள் இருக்கின்றனர்.

மக்களின் வாழ்வில் வசந்தம் கொண்டு வரவில்லையே என்ற ஏக்கத்தில் அன்று இருந்த தலைவர்கள் வேதனை அடைந்தனர். ஆனால் அதன்பிறகு வந்தவர்கள் ஊழல் கறைபடிந்தவர்களாக மாறத்தொடங்கினர். அதனால் நாட்டின் மானம் சந்திசிரித்தது.பல நூறு கோடி ஊழல்கள், பல்லாயிரம் கோடி ஊழல்கள், என தாண்டி லட்சம் கோடி ஊழல்கள் என ஊழல் பரிணாம வளர்ச்சி கண்டுள்ளது. அதில் தமிழகத்தை ஆளும் திமுக அபார (!) சாதனை படைத்துள்ளது.

அதில் மேலும் வேதனையை கூட்டும் விதமாக ஸ்பெக்ட்ரம் ஊழல்கள் சாமான்ய மக்களின் உள்ளக்குமுறலை அதிகப்படுத்தியது.

அன்று தொலைத் தொடர்புத் துறை செயலாளராக பதவி வகித்த பி.ஜே.தாமஸ், தற்போது மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக (கமிஷனர்) பதவி வகித்து வருகிறார். அரசியல் சட்ட அதிகாரம் கொண்ட ஊழல் கண்காணிப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மத்திய அரசின் புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ. செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே.தாமஸ், ஏற்கனவே கேரள மாநிலத்தில் முன்பு உணவுத்துறை செயலாளராக பதவி வகித்தபோது பாமாயில் இறக்குமதி ஊழலில் குற்றம் சாட்டப்பட்டவர். அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அவர் ஊழல் கண்காணிப்பு கமிஷனராக தேர்வு செய்யப்பட்டதற்கு உச்சநீதிமன்றம் ஏற்கனவே கண்டனம் தெரிவித்து இருந்தது.

தற்போது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கிலும், பி.ஜே.தாமசுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்து இருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக, பி.ஜே.தாமசும் (தொலைத் தொடர்புத் துறை செயலாளர் பதவி வகித்த வகையில்) சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் இருப்பதாக குறிப்பிட்ட நீதிபதிகள், அவருடைய கண்காணிப்பில் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டு இருந்தனர்.

ஊழல் கண்காணிப்பு ஆணையரை பிரதமர், மத்திய உள்துறை மந்திரி, பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ஆகியோரைக் கொண்ட 3 பேர் குழுவினர்தான் தேர்வு செய்ய வேண்டும். தேர்வின்போதே தெரிவிக்கப்பட்ட எதிர்ப்பை பொருட்படுத்தாமல், பெரும்பான்மை ஆதரவு (பிரதமர், உள்துறை மந்திரி) அடிப்படையில் அந்த பதவியில் தாமஸ் நியமிக்கப்பட்டார்.

“அரசு என்னை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக நியமித்தது. அந்த பதவியில் நான் தொடர்ந்து இருந்துவருகிறேன்” என்று பி.ஜே.தாமஸ் தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் அவர் மீது தெரிவித்த கண்டனம் குறித்து கேட்டபோது “நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் விஷயம் குறித்து நான் கருத்து தெரிவிப்பது முறையான செயல் அல்ல’’ என்று தாமஸ் நழுவினார்.

பாமாயில் இறக்குமதி ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகையில் உங்கள் பெயர் இருக்கிறதா? என்று கேட்டதற்கு, “இதன்பிறகுதான் அரசு என்னை இந்த பதவியில் நியமித்தது.” என ஆணவமாக அவர் பதில் அளித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் தாக்கல் செய்த மனுவில், ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணைப் பொறுப்பில் இருந்து மத்திய ஊழல் கண்காணிப்பு கமிஷனர் விலகிக்கொள்ள விரும்புவதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த நிலையில், பி.ஜே.தாமஸ் பதவியில் நீடிப்பதாகக் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவின் மூலம் பி.ஜே.தாமசை காப்பாற்ற மத்திய அரசு முயற்சிப்பதாகவே தெரிகிறது.

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலை மூடி மறைத்து, உண்மைக் குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க ஏற்கனவே நடைபெற்று வரும் முயற்சிகளில் தற்போதைய இந்த நியமனமும் முக்கிய இடத்தைப் பெற்று உள்ளது. கோடானுகோடி பணம் சுருட்டப்பட்ட ஊழலில் குற்றவாளிகளைத் தப்புவிக்கும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு உள்ளது என்பது தெளிவாகி விட்டது. தற்போது ஊழல் குற்றச்சாட்டின் சந்தேக முள், முழுமையாக மத்திய அரசின் மீது பாய்வதால், இந்த ஊழலின் பயனாளிகள் யார் என்ற கேள்வியும் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. இவ்வளவு பெரிய ஊழல் குற்றச்சாட்டில் உண்மையைக் கண்டறிய விடாமல், மத்திய கண்காணிப்பு ஆணையத்தையே தலையிடக்கூடாது என்று சொன்னவரையே, அந்த ஆணையராக நியமனம் செய்து உள்ள மத்திய அரசு, அந்த நியமனத்தை உடனடியாக ரத்து செய்து, பி.ஜே. தாமஸை அந்தப் பொறுப்பில் இருந்து விடுவிக்க வேண்டும்.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக விளங்கும் தமிழக அரசின் செயலை ஒடுக்கிட வும் மற்றும் அதனை தாலாட்டி சீராட்டி வரும் மத்திய அரசும் தனது பொருளாதார முறைகேடுகளையும் ஊழலையும் ஒழித்துக்கட்ட இனியும் முன்வராவிட்டால் மக்கள் தீர்ப்பின் முன் அவர்கள் அடையாளம் காணாமல் போவார்கள் என்பது உறுதி.

1 comment: